அப்பாவுக்காக

விவரம் புரியா வயசுல
தவழ்ந்து திரிஞ்ச நேரத்துல
என் கன்னம் புடுச்சு கொஞ்சுவாயாமே!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.
மழை பேஞ்சு முடிஞ்சா
மண்வெட்டி ஒரு தோளிலும்
நான் ஒரு தோளிலுமாக
வரப்பு ஏறி அணை கட்டச் செல்வாயாமே!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.
மாமா வீட்டுக் கல்யாணத்தில்
நான் அழுதேன் என்று
சாப்பிடாமலே எழுந்து ஒடி வந்தாயாமே!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.
முதல் பிறந்த நாளுக்கு
புது டவுசர் போட்டு விட்டு
சிங்கம் மாதிரி இருக்கான்டினு
சொல்லிச் சொல்லிச் சிரிச்சியாமே!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.
டூரிங் டாக்கீசுக்கு போயி
எனக்கும் படம் தெரியனும்னு
உன் தலை மேல தூக்கி வச்சிகிட்டியாமே!!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.
எனக்காக நடைவண்டி வாங்கிட்டு
வீட்டுக்கு ஓடி வரும்போது
லாரி உன் மேல மோதி...
இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியலப்பா..
அப்பவும் நீ என்னைத்தானே நெனைச்சிட்டு இருந்துருப்ப?
அம்மா சொல்லாமலே புரியுது எனக்கு...


1 Comments:
rombe touching-a irukku..real-a irukku..ellarudaye veedilum appa seiyure visayangal than ithu..bt, ending than kasdema pochu..bt,kavithai-nu paartha unmeyave rombe nalla irukku..keep it up friend..
Post a Comment
<< Home