Friday, October 19, 2007

இன்று இலையுதிர்காலம் ..



உன் இதய வானில்
நானொரு நிலவாக நினைத்திருந்தேன்!!
இருண்ட மேகமாகி இன்று
கரைந்து காணாமலே போனேன்!!
செடியாக நீயிருந்தபோது
வேராகிட நினைத்திருந்தேன்!!
நானும் ஒரு இலைதான் என
எனக்கு புரியவைத்தாய்!!
இன்று இலையுதிர்காலம்...
உதிர்ந்த சருகாகி
உந்தன் வேருக்கே உரமாகி போனேன்!!

Thursday, October 04, 2007

அப்பாவுக்காக



விவரம் புரியா வயசுல
தவழ்ந்து திரிஞ்ச நேரத்துல
என் கன்னம் புடுச்சு கொஞ்சுவாயாமே!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.


மழை பேஞ்சு முடிஞ்சா
மண்வெட்டி ஒரு தோளிலும்
நான் ஒரு தோளிலுமாக
வரப்பு ஏறி அணை கட்டச் செல்வாயாமே!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.

மாமா வீட்டுக் கல்யாணத்தில்
நான் அழுதேன் என்று
சாப்பிடாமலே எழுந்து ஒடி வந்தாயாமே!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.

முதல் பிறந்த நாளுக்கு
புது டவுசர் போட்டு விட்டு
சிங்கம் மாதிரி இருக்கான்டினு
சொல்லிச் சொல்லிச் சிரிச்சியாமே!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.

டூரிங் டாக்கீசுக்கு போயி
எனக்கும் படம் தெரியனும்னு
உன் தலை மேல தூக்கி வச்சிகிட்டியாமே!!!
அம்மா சொல்லி இருக்கிறாள்.

எனக்காக நடைவண்டி வாங்கிட்டு
வீட்டுக்கு ஓடி வரும்போது
லாரி உன் மேல மோதி...
இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியலப்பா..
அப்பவும் நீ என்னைத்தானே நெனைச்சிட்டு இருந்துருப்ப?
அம்மா சொல்லாமலே புரியுது எனக்கு...



Wednesday, October 03, 2007

ஒரு பெ(க)ண்ணின் கதை



(அவள் கண்ணின் பார்வையில்)
நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்
மேல் உதடுக்கும் கீழ் உதடுக்கும் சண்டை
யார் அவனுக்கு முதல் முத்தம் தருவதென்று!!
பொதுவாய் ஒரு தீர்ப்புச் சொன்னேன்
சேர்ந்து கொடுத்தால் சுகம் என்று!!
இவளது இதழ் குவித்து அவனிடம்
முத்தப் பரிமாற்றம் நடத்தினாள்
எனக்குத் தான் வெட்கத்தில் கண்கள் மூடிக்கொண்டன.